கன்னட திரையுலகின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

தமிழில் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையில் உள்ள ராஷ்மிகாவின் வீடு மற்றும் திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். பெங்களூரு மண்டல அலுவலகத்திலிருந்து 3 கார்களில் வந்த 15 அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர்.

ராஷ்மிகாவின் பெற்றோரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராஷ்மிகா “நான் அதிக ஊதியம் பெறுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. நான் இப்போது தான் வளர்ந்துவரும் நடிகை. அதிக செலவில் தயாராகும் படங்களில் நான் இன்னும் நடிக்கவில்லை. எனினும் வரி ஏய்ப்பு போன்ற தவறான செய்திகள் என்னைப் பற்றிப் பரப்பப்படுகின்றன. வருமான வரித் துறையை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்றார்.