டில்லி

டந்த ஆண்டு மூலதனம் குறைவால் 1701 வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி விதி 1977 திருத்தத்தின் படி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நிகர மூலதனம் குறைந்தது ரூ. 25 லட்சமாக மாற்றப்பட்டது.   அதன் பிறகு புதியதாக பதியும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அதை ரூ. 2 கோடியாக உயர்த்தியது.  அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் நிதி நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தை படிப்டியாக உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கான காலக்கெடுவாக 2017ஆம் வருடம் மார்ச் 31 நிர்ணயிக்கப் பட்டது.   பல நிதி நிறுவனங்கள் இந்த குறைந்தபட்ச மூலதனத்தை அதிகரிக்காமல் இருந்துள்ளது.  அதை ஒட்டி ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது.  அவ்வாறு கெடு முடிந்தும் மூலதனத்தை அதிகரிக்காத நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய தொடங்கியது.   இதனால் பல நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் 779 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   2019 மார்ச் மாதத்துடன் முடிந்த கணக்கு வருடத்தில் மொத்தம் 1701 வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் இந்த உரிமங்கள் ரத்து செய்யப்படாவிட்டாலும் மூலதனம் இல்லாததால் நிறுவனங்கள் தானே அழிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மூலதனம் அதிகரிக்க இயலாததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்களுக்கு கடன் அளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை என பொருளாதர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.    அதாவது கடன் கொடுக்க மட்டுமே இந்த நிறுவனங்களால் முடியுமே தவிர கடன் பெற முடியாது.  இந்த உத்தரவுக்கு காரணம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முழுக்க முழுக்க சொந்தப் பணத்தில் இயங்க வேண்டும் என்பதாகும்.