டெல்லி: கொரோனா பரவலால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: கொரோனா என்பது 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. உற்பத்தி, வேலை வாய்ப்பு துறைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
நமது நிதி அமைப்பை பாதுகாக்க, தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வளர்க்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார மந்தநிலையை சமாளிக்க இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.