டில்லி:

ரெப்போ வட்டி குறைப்பை ரிசர்வ் அறிவித்து உள்ள நிலையில்,  வீடு வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 4வது முறையாக ரெப்போ   மதிப்பை 0.35 சதவிகிதம்  அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கியின் 2019-2020ஆம் நிதியாண்டின், மூன்றாவது காலாண்டிற்கான நிதி கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பான மூன்று நாள் ஆலோசனை கூட்டம், மும்பையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வங்கிகளின் செயல்பாடுகள்  குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, தற்பேதைய ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதுபோல,  நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம், 35 அடிப்படை புள்ளிகள் என்ற அடிப்படையில், குறைக்கப்படுவதாக  அறிவித்தார்.

இதன்மூலம், ரெப்போட் வட்டி விகிதம் 5 புள்ளி 75 விழுக்காடாக இருந்த நிலையில், 5 புள்ளி 40 விழுக்காடாக குறைந்துள்ளது. இதுதவிர ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 5 புள்ளி 50 விழுக்காட்டிலிருந்து, 5 புள்ளி 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நடப்பு நிதியாண்டின், GDP எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு, 7 விழுக்காட்டிலிருந்து, 6. 9 சதவிகிதமாக குறைத்து, ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதன்மூலம், வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டிவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது, உற்பத்தி, சுரங்கங்கள் துறைகளில் வீழ்ச்சியால், கடந்த மே மாதம் தொழில்துறை வளர்ச்சி சற்று குறைந்திருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில், நாட்டின் மின்துறை நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள்  ஆன்லைன் மூலமாகவோ, வங்கிகள் மூலமாகவோ, பணத்தை அனுப்ப வல்ல, NEFT எனப்படும் தேசிய மின்னணு நிதி பறிமாற்றம் முறைக்கு கட்டுப்பாடு உள்ள நிலையில் அதை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் பணத்தை அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இந்த வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.