கொல்கத்தா: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் முதலில் சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருக்கிறார்.

குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருபவர் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி. பேரணி, ஆர்ப்பாட்டம் என்று தமது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

சிஏஏ சட்டத்தை முதலில் திரும்ப பெற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அவர் கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

பிரதமர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது நல்லது. காஷ்மீர் மற்றும் சிஏஏ குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை அழைக்கவில்லை.

என்ஆர்சி, என்பிஆர் மற்றும் சிஏஏ 3ம் நாட்டுக்கு மோசமானவை. இவற்றை ஏற்க மாட்டோம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.

மேற்கு வங்கத்தை ஆளும் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் சிஏஏக்கு எதிராக சில நாட்களுக்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு, இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றிய 4வது மாநிலம் மேற்கு வங்கம் ஆகும்.