திருவனந்தபுரம்:

நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர், லோக் சபாவின் காங்கிரஸ் தலைவராக இருக்க தயார் என்று தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட சசிதரூர், அவரை எதிர்த்து போட்டியிட்ட கும்மன்னம் ராஜகோபாலை விட சிதரூர் 2,97,808 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஓ. ராஜகோபால் 2,82,336 வாக்குகள் பெற்றார்.

கேரள மாநிலத்தின் 20 லோக்சபா தொகுதியில் 15 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  அதைத்தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதியில் போட்டியிட்டு 9 இடங்களை கைப்பற்றி உள்ளது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள 52 தொகுதிகளில் சுமார் 50 சதவிகிதம் (24 தொகுதிகள்)  தென்மாநிலங்களையே சேர்ந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக பதவி ஏற்க தயார் என்று சசிதரூர் தெரிவித்து உள்ளார்.

மேலும் காங்கிரசின் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தவர், தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இந்துவா கொள்கையில் மென்மை யோன போக்கையே மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த   குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நியாய் (NYAY)  திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் இலவச நிதி உதவி அளிக்கப்படுவது குறித்து சரியான முறையில் மக்களிடம் விளக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

கட்சி விரும்பினால், மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகிக்கவும் தயார் என்று தெரிவித்தார்.