டெல்லி:

மத்திய அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்கு படுத்தல் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்தவும் ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரவும் ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் 2016-ஐ கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி சட்டத்தில் சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில விதிகள் மட்டும் கடந்தாண்டு ஆண்டு அமலுக்கு வந்தது.

மீதியுள்ள விதிமுறைகள் 2017-ம் ஆண்டு மே 1ம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதுதவிர, அந்தந்த மாநில அரசுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. தமிழக அரசு இதற்கான விதிகளை கடந்த ஜனவரியில் இறுதி செய்தது.

இந்த சட்டத்தின்படி முறைகேடான கட்டுமானங்கள் நடைபெறுவதையும், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள மோசடிகளும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் உறுதியளித்தபடி குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கவில்லை என்றால் தண்டனை வழங்கும் சரத்துகளும் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் 45 நாட்களுக்குள் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பே கட்டிடத்தின் அசல் மாதிரி என்பது போன்ற சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை போட்டு விளம்பரம் செய்ய முடியாது. இது தவிர ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் சட்டம் அமலுக்கு வருவதால் வீடுகளின் விலை சிறிது உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) தமிழ்நாடு பிரிவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ரெரா சட்டம் எனப்படும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

மேலும் தொழிலில் வெளிப்படைத் தன்மை இருக்கும். இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மீதும் கட்டுமான நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை உண்டாகும். குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அரசுத்துறை சார்ந்த அனுமதிகளும் உடனுக்குடன் கிடைத்துவிடும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஏற்கெனவே ஒழுங்குப்படுத்தப்பட்ட முறையில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு இச்சட்டத்தால் பாதிப்பு ஏற்படாது. ஒழுங்குப்படுத்தாத நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு. மேலும் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் முறையான அனுமதி, உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றே தீர வேண்டும். இதற் காக அரசுக்கு பல வகைகளில் கட்டணங்கள் செலுத்த வேண்டி வரும். இதனால் வீடுகளின் விலை சிறிது உயரும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.