அம்மன் கோயில்களின் சூலங்களில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்?
எலுமிச்சம்பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.  திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம்பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.
 சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது.
காரணங்கள்
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்குக் காரணம் எலுமிச்சை தேவகனி என்று அழைக்கப்படுவதால் தான்.
 இராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும்.
இதனை வேறு வகையில் சொல்ல வேண்டும் என்றால் ஆயுதங்கள் அது எதுவானாலும் ரத்தம் கேட்கும். எனில், சூலமும் ஒரு ஆயுதம் தான்.
அம்மன் கோயில்களில் அந்த ஆயுதத்தால் எந்த ஒரு பலியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு எலுமிச்சை பழத்தைப் பலியாக சூலத்தில் சொருகி வைக்கும் பழக்கம் சோழர் காலம் முதற்கொண்டு வழிவழியாக இருந்து வருகிறது.
அது இன்று கோயில்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது எலுமிச்சை பழத்தின் வெளித்தோற்றம் தோலாகவும், அதற்குள் இருக்கும் பழம் நிறைந்த பாகம் மாமிசமாகவும், அதில் உள்ள சாறு இரத்தமாகவும் பாவிக்கப்படுகிறது.
எல்லா அம்மன் கோயில்களிலும் கோழி போன்ற அசைவ பலியைத் தர இயலாது. அந்த இடத்தில் எலுமிச்சை பழம் பலி செலுத்த உகந்த பழமாகக் கருதப்படுகிறது.
இதனால் கோயிலின் சாங்கியம் காக்கப்படுகிறது. உடன் அம்மனின் கோபமும் தணிகிறது. எலுமிச்சை வாசனையால் அம்மன் சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகிறாள் என்று சக்தி புராணம் கூறுகிறது.
அன்னையின் அருள் பெற  “ஐம் க்ரீம் க்லீம் சாமுண்டாய விச்சே!” என்ற இந்த மந்திரத்தைச் சொல்லி எலுமிச்சை பழத்தை சூலத்தில் குத்தினால் அம்மன் அருள் திருவருளாய் கிடைக்கும். இதனைத் தொடர்ந்து செய்யும் போது இராகு தோஷம் விலகும். இதில் ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.
சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்குச் சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என்று பொருள். இந்த மந்திரத்தைச் சொல்லி எலுமிச்சையை சூலத்தில் குத்த முப்பெரும் தேவியரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.