சென்னை

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தாம் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அணிகள் களத்தில் உள்ளன.  இதைத் தவிர சீமான் தலைமையில் ஆன நாம் தமிழர் கட்சி, மற்றும் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளன.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தாம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக  அறிவித்திருந்தார்.  ஆனால் அவர் தற்போது அதற்குப் பதிலாக திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.  அதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நான் போராட வேண்டி உள்ளது.   எனவே நான் கொளத்தூருக்குப் பதிலாக திருவொற்றியூரில் இருந்து போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.