செவ்வாய்க்கிழமைகளில் முடி திருத்தம் மற்றும் தானம் செய்யக்கூடாது என்று சொல்லுவது ஏன்?

இந்து மரபில் செவ்வாய்க் கிழமைகளில் முடி திருத்தம் செய்வதை ஊக்குவிப்பதில்லை. இந்த பழக்கம் வெறும் மூட நம்பிக்கை சார்ந்தது அல்ல. இதன் பின் பெரும் தாற்பரியம் அடங்கியுள்ளது. செவ்வாய்க் கிழமைகளில் மக்கள், முடி திருத்தம் மாத்திரம் அல்ல, பிறருக்குப் பணம் கொடுப்பது, தானம் வழங்குவது போன்ற செயல்களையும் செய்வதில்லை. இதற்குக் காரணம், செவ்வாய் என்பது துர்கை மற்றும் இலட்சுமியை வணங்க உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

செவ்வாய் என்பது இலட்சுமியின் அம்சம் என்ற கூற்றும் உண்டும். இந்த நாளில் பணத்தை எந்த ரூபத்திலேனும் வெளியே அனுப்புவது நாம் இலட்சுமி தேவியையே வீட்டிலிருந்து அனுப்புவதாகக் கருதப்படுகிறது. அதனால் நம் முன்னோர்கள் இந்த நாளில் வீட்டின் பொருட்கள், பணம் ஆகியவற்றைப் பிறருக்கு எந்த வடிவிலும் மிக மிக அத்தியாவசியம் அன்றி வழங்குவதில்லை.

அதே வேளையில் இந்த நாளை வரவிற்கான நாளாகக் கருதுகிறார்கள். இந்த நாட்களில் ஏதேனும் பொன்னோ, பொருளோ கிடைத்தாலோ அல்லது பெண் குழந்தைகள் பிறந்தாலோ அதனைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

 

இதற்குப் பின் சொல்லப்படும் காரணம் என்னவெனில், செவ்வாய் என்கிற கிழமை செவ்வாய் என்கிற கிரகத்திற்கு உரியது . ஜோதிட ரீதியாகச் செவ்வாய் என்பது மனிதர்களின் இரத்தத்துடன் தொடர்புடையது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய்க் கிரகத்தின் ஆதிக்கம் நம் இரத்தத்தில் அதிகமாக இருக்கும். எனவே செவ்வாய்க்கு உரிய நாளில் நாம் முடி திருத்தம் செய்வது நம் இரத்தத்தின் ஒரு பகுதியை இழப்பது போன்றது எனச் சொல்லப்படுகிறது.

இந்த கருத்து ஆதார பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை எனினும் பலருக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, ஒரு சில வீடுகளில் மிகப் பெரும் அளவிலான சுத்தம் செய்தலைத் தவிர்க்கிறார்கள். தினசரி செய்யக்கூடிய அடிப்படை சுத்தம் என்பது விதிவிலக்கு.

முடித்திருத்தம் என்பது சுய ஒழுக்கம் சார்ந்தது. அதில் சில பழக்க வழக்கங்கள். நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது எனில், அதைக் கடைப்பிடிக்கும் சாத்தியங்கள் இருப்பின் கடைப்பிடிக்கலாமே. அனைத்து சாஸ்திரங்களையும் புறந்தள்ளுவதால் நம் கலாச்சாரத்தின் வேரினை நாம் இழக்க நேரலாம் என்பதில் நினைவில் கொள்வோம்.