டெல்லி: மத்திய பிரதேச காங்கிரசில் இருந்து விலகிய அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர்.

அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதால், கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்தது. பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த கமல்நாத், மத்திய பிரதேச மக்களுக்கு பாஜக துரோகம் இழைத்து இருக்கிறது.

எனவே நான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார். இதற்கிடையே, பெங்களூரில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் டெல்லியில் உள்ள பாஜக தெசிய தலைவர் ஜே.பி.நட்டா வீட்டுக்கு சென்று, தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.