க்ரா

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரப் பிரதேச பார் கவுன்சில் தலைவி தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவருக்கான தேர்தலில் கடந்த 10 ஆம் தேதி அன்று பெண் வழக்கறிஞரான தர்வேஷ் யாதவ் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்திரப் பிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் இவர் ஆக்ரா நீதிமன்றத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

பாராட்டு விழாவில் தர்வேஷ் யாதவ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவரது சக வழக்காறிஞரான மனீஷ் சர்மா என்பவர் திடீரென எழுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை மற்றவர்கள் தடுக்கும் முன்பு தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார். இருவருக்கும் இடையில் வெகுநாட்களாக பகை இருந்ததாக சொல்லப்படுகிறது.

உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தர்வேஷ் யாதவ் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். மனீஷ் சர்மா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் உள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் மனீஷ் உபயோகித்த துப்பாக்கி உரிமம் பெற்றதாகும். தற்போது அந்த துப்பாக்கி காவல்துறையினரிடம் உள்ளது.  தர்வேஷ் யாதவ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.