கொல்கத்தா
இந்தியப் பொருளாதாரக் கதவை ஆட்குறைப்பு தட்டுவதாக மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்
தற்போது இந்திய பொருளாதாரம் மிகவும் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதைப் போலவே பொருளாதாரத்துக்கு ஆதாரமான உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. இதன் தாக்கம் வேலை வாய்ப்பிலும் எதிரொலித்து வருகிறது.
மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் பொதுச் செயலராகவும் பணி புரிந்துள்ளார். அமித் மிஸ்ரா, “கடந்த ஐந்து வருடங்களாக உற்பத்தி குறைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. அத்துடன் தற்போதைய மோடி அரசு அனைத்து தொழிலதிபர்களையும் மிகவும் துன்புறுத்தி வருகிறது.
இதனால் பல தொழிலதிபர்கள் அச்சமடைந்து நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்துக்கு கடும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் இந்தியப் பொருளாதாரம் மேலும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பொருளாதார வீழ்ச்சியால் வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தின் கதவைத் தட்டி வருகிறது என கூற முடியும்” என தெரிவித்துள்ளார்.