சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு குணமடைந்துள்ளார்.

ஆர்.டி.அரசு காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர், மருத்துவரும்கூட! திமுக மருத்துவ அணியில் மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.

திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபெற்று உதவி வழங்கும் பணிகளை தனது தொகுதியில் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையொட்டி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக பலியானார். ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, கள்ளக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ செய்யூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு குணமடைந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆர்.டி.அரசு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.