சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல நிறுவனங்கள் திறக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெற்று வருவதால், மீண்டும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்த நெரிசல் மற்றும் சிக்னல் காத்திருப்பு காரணமாக  வாகன ஓட்டிகள் ஒருவருடன் ஒருவர் ஒட்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் தொற்று பரவலுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து,  சென்னையில் முக்கிய இடங்களில் வாகன புழக்கம் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி பல நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதன்படி, சென்னை சிக்னலில் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சிக்னலில் மக்களின் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, 10 முக்கிய இடங்களில் காத்திருப்பு நேரம் 60 நொடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.