புதுடெல்லி: தற்போது நடைமுறையில் புழக்கத்திலுள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவை என்றும், அவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

பொதுவாக, 10 ரூபாய் நாணயப் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பல இடங்களில் திடீரென அவற்றை வாங்க மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களும் அதில் அடக்கம்.

இதனால், பலரும் தேவையற்ற குழப்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள். தமிழகத்தின் சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை. எனவே, இதுதொடர்பான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு சென்றதையடுத்து, ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

“கடந்த 1906ம் ஆண்டு இந்திய நாணயச் சட்டத்தின்படி, 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என்று அறிவிப்பதோ சட்டப்படி குற்றம். அப்படி செய்வோர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124இன் படி வழக்குப்பதிவு செய்ய முடியும். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்றி யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது” என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.