மதுரை:

நீதி மன்ற உத்தரவுப்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன.

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் செயல்பட்டன. ஆயிரங்கால் மண்டபம் அருகே, வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள்  செயல்பட்டன. இவற்றில் கடை எண், 75, 76 ல் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது.  தீ விபத்துக்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி, பல தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கபப்பட்டன.

இதையடுத்து கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  மீனாட்சி கோயில் வளாகத்தில் செயல்படும் 115 கடைகளை இன்று (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும், 3 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலையில் அக்கடைகள் அகற்றப்பட்டன.