சென்னை:

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் அதிமுகவில் உள்ளனர். நாடகம் நடத்தாமல் அனைரையும் நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 2 அணிகளின் இணைப்பு கிட்டத்தட்ட உடைந்து சிதறிப் போன கதையாகி வருகிறது. ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி இன்று சசிகலா அணியை ஒரு பிடி பிடித்துள்ளார். குறிப்பாக மன்னார்குடி குடும்பத்தைப் பற்றி அவர் காரசாரமாக விமர்சனம் செய்துள்ளார். அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். மொத்தக் சசிகலா குடும்பத்தை முதலில் நீக்குங்கள். அப்புறம் தான் பேச்சுவார்த்தை என்று முனுசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ஜெயக்குமார் பேசும்போது தினகரன் குடும்பம் என்று தான் கூறினார். சசிகலா பெயரையே அவர் சொல்லவில்லை. திரும்பத் திரும்ப தினகரன் குடும்பம் என்று தான் கூறினார். மொத்த சசிகலா குடும்பத்தையும் அவர்கள் நீக்க வேண்டும். சசிகலா குடும்பத்தில் அவர் மட்டும் இல்லை. அங்கு ஒரு 30 பேர் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் கட்சியை விட்டு மொத்தமாக வெளியேற்ற வேண்டும். யாரும் இருக்கக் கூடாது. அதைத்தான் கோரி வருகிறோம்.

இத்தனை பேரையும் அதிகாரப்பூர்வமாக நீக்கி விட்டு அதை பகிரங்கமாக சொல்லட்டும். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போது தினகரனை மட்டும் வெளியே ஒதுங்கியிருக்கச் சொல்லி விட்டு நாடகமாடுகிறார்கள்’’ என்றார் கே.பி. முனுசாமி.