ஷில்லாங்:

மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட எம்எல்ஏ ஜூலியஸ் தோர்பங்க அசாமில் கைது செய்யப்பட்டார்.

மேகாலயா உள்துறை அமைச்சர் லிங்டோவின் மகன் வீட்டில் 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அமைச்சரின் மகன் உட்பட 8 பேரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் பேரில் பலாத்காரத்தில் ஈடுபட்ட மேகாலயா சுயேட்சை எம்எல்ஏ ஜூலியஸ் தோர்பங்கை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் தோர்பங் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ரகசிய இடத்தை சுற்றி வளைத்து தோர்பங்கை கைது செய்தனர்.

இவர் ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்து மனம் திருந்தி அரசிடம் சரணடைந்தார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.