வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்பத்தை, தொடர்ந்து நீக்கி வருவதாக பேஸ்புக் நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ளது.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது கொத்துக்குண்டுகளை வீசியது. அந்த குண்டு வீச்சுகளில் இருந்து தப்பிக்க, சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உலகப்புகழ் பெற்றதாகும்.
போரின் கொடுமையை உலகுக்கு உணர்த்திய அந்த ஒளிப்படத்தை நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்தார். உடனே அந்தப்படத்தை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியது.
இந்த நிகழ்வு செய்தித்தாளில் வெளியாக, நார்வே நாட்டு பிரதமர், அதே படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதையும் பேஸ்புக் நிர்வாகம் நீக்கியது.
சிறுவர்களை ஆபாசமாக சித்தரிக்கும் படம் அதுவென நினைத்து பேஸ்புக் நிர்வாகம் நீக்கியதாக தெரிகிறது.
ஆனால், “சிறுவர்களின் ஆபாச படமா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படமா என்பதைக்கூட பேஸ்புக் நிர்வாகம் அறியவில்லை. இந்த வேறுபாடு தெரியாமல் படத்தை நீக்கியது, பேஸ்புக் நிர்வாகத்தின் வரம்பு மீறிய அதிகாரத்தையே வெளிப்படுத்துகிறது. இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது” என்று உலகம் முழுதுமுள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.