வேலூர்

வேலூர் மக்களவை தேர்தல் முடிவில் கடும் இழுபறியில் இருந்த அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி அன்று வேலூர் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகம் ஆகியோர் பொட்டி இட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சென்ற வாரம் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக முதலில் பின்னடைவில் இருந்தது. அதன் பிறகு அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் திமுக, அதிமுக என மாறி  மாறி முன்னணியில் இருந்தன.

ஜம்மு, காஷ்மீர் குறித்து அன்றுதான் மத்திய அரசு முடிவு எடுத்ததால் அதன்  தாக்கம் தேர்தலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டவிரோத செயல் எதிர்ப்பு சட்டம் மற்றும் உடனடி முத்தலாக் தடை சட்டம் ஆகியவற்றை பாஜக நிறைவேற்றி இருந்தது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக முத்தலாக் தடை சட்டத்தை மக்களவையில் ஆதரித்தும் மாநிலங்களவையில் எதிர்ப்பும் தெரிவித்தது.

குறிப்பாக மக்களவையில் தற்போது அதிமுகவின் ஒரே  உறுப்பினரான ரவிந்திரநாத் முத்தலாக் சட்டத்தை ஆதரித்துள்ளார். இஸ்லாமியர் அதிகமுள்ள வேலூர் தொகுதியின் பல பகுதிகளில் அந்த தாக்க இஸ்லாமிய ஆண்கள் இடையே இருந்துள்ளது. இதை நாம் சட்டப்பேரவை தொகுதி வாரியான  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மூலம் எளிதில் கண்டறியலாம்.

குறிப்பாக வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் அணைக்கட்டு போன்ற சட்டப்பேரவை தொகுதிகளில் இஸ்லாமியர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர். இந்த இடங்களில் அதிமுக பெற்ற வாக்குகள் திமுகவை விடக் குறைவாகும். மற்ற பகுதிகளில் அதிமுக அதிகப்படியான வாக்குகள் பெற்ற போதிலும் இறுதியில்  அதிமுக தோல்வியைச் சந்தித்தமைக்கு இவை அனைதுமே  காரணமாகும்.