வாஷிங்டன்,

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.  ஷைலா அப்துஸ் சலாம், இஸ்லாமியரான இந்தப் பெண்மணி ஆப்ரிக்க-அமெரிக்கராவார். இவருக்கு 65 வயதாகிறது.

நியூயார்க் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமை இவருக்குண்டு. அமெரிக்காவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி பழுத்த அனுபவம் உள்ளவர் இவர்.  நீதிமன்றங்களில் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பார்.

இந்நிலையில் இவரைக் காணவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், மன்ஹாட்டன் அருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஹட்சன் நதியில் அவரது உடலை நேற்று மதியம் மீட்டனர்.

இவரைப்பற்றி   பத்திரிகைகள், மனிதத் தன்மையுடன் நடந்துகொள்ளும் நீதிபதி என்று புகழாரம் சூட்டியுள்ளன.   இவரது மரணம் குறித்து வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பணத்துக்காக யாராவது அடித்துப் போட்டிருக்கலாம் என்பதற்கான அடையாளமோ காயமோ அவரது  உடலில் இல்லை என்று தெரிவித்த போலீசார் மேலும் விசாரணை நடத்திவருவதாக கூறினர்.

இந்த பெண் நீதிபதி, ஆப்ரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் என்பதால் இனரீதியான தாக்குதலாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்தக்கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.