புதுடெல்லி: அரசுப் பணிகளில் பதவி உயர்‍வு நடைமுறையின்போது இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூக மட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்ரகாண்ட் மாநிலம் சார்பாக தொடரப்பட்ட ஒரு மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில் உதவி பணியாளர் பணியிடங்களை, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நிரப்பும் முடிவிற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோலின் கோன்ஸ்லேவ்ஸ் மற்றும் துஷ்யந்த் துவே ஆகியோர் வாதாடினர்.

அந்த வாதத்தில், பழங்குடியினருக்கு உதவ அரசியல் சட்டப்பிரிவு 16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய பிரிவின்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது; பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல. அப்படியான நிபந்தனை மாநில அரசுக்கு இல்லை. பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என எந்த ஒரு தனிநபரும் கேட்க முடியாது. இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட முடியாது.

மாநில அரசு பணியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என மாநிலங்கள் கருதினால் மட்டுமே, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய சட்டப்பிரிவுகள் அதிகாரம் கொடுக்கிறது. இதேபோல், பதவி உயர்வின் போதும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதிலும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதிலும் வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை முடிவு செய்வதில் ஒரு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. இதில் எந்தக் கட்டாயமும் கிடையாது. எனவே, வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.