கொச்சி

சுற்றுச்சூழல் விதிகளை மீறி கொச்சியில்  கட்டப்பட்டதாக 4 அடுக்கு மாடிக் கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கேரளாவில் உள்ள கொச்சி நகரில் மரடு  பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 4 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.  இந்த 20  மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மேஜர்  ரவி, நடிகர் சவுபின் சாகிர், இயக்குநர் பிளஸ்ஸி உள்பட முக்கிய பிரமுகர்கள்  வசித்து வருகின்றனர்.  உச்சநீதிமன்றத்தில் இந்த குடியிருப்பு சுற்றுச்சூழல் விதிகளை மீறிக்  கட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்களை  இடிக்கக் கடந்த மாதம் உத்தரவிட்டது.

கேரள அரசு இதுதொடர்பாக எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.. பலமுறை உச்சநீதிமன்றம் கேரள அரசைக்  கடுமையாக எச்சரித்தும் கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   எனவே உச்சநீதிமன்றம் உடனடியாக அந்த கட்டிடங்களை இடிக்காவிட்டால் கேரள அரசு தலைமைச் செயலாளரைக் கைது  செய்ய உத்தரவிட வேண்டியது வரும் என எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கைக்குப் பிறகு இந்த  4 குடியிருப்புகளையும் இடிக்கும் நடவடிக்கையைக் கேரள அரசு தொடங்கியது.

உச்சநீதிமன்றம், கேரள அரசால்  அடுக்குமாடிக் குடியிருப்பை இடிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டிருந்தது. வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் குடியிருப்புக்களை இடிக்கும் பணி தொடங்கும் என்றும்,  அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடிக்க   திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் கேரள  மின்வாரிய அதிகாரிகள் ஒரே சமயத்தில் 4 குடியிருப்புகளிலும் மின் இணைப்பைத்  துண்டித்தனர். அத்துடன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.  இவ்வாறு அதிகாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்த குடியிருப்பு வாசிகள் மிகவும்  அதிர்ச்சி அடைந்து நேற்று காலை முதல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு மின் இணைப்பு மற்றும் குடிநீரைத் துண்டிப்பது மனித உரிமை மீறல் என்று  அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். கேரள அரசு வரும் 29ம் தேதி முதல் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது. அதே வேளையில் எந்த காரணம் கொண்டும் வெளியேறமாட்டோம் என்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் கேரள அரசு நிறைவேற்றுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.