காசரகோடு

காசரகோடு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கேரளாவில் மலையாள மொழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

கேரளா அரசு, தற்போது கேரள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மலையாள மொழி கட்டாயமாக்கியது.  இதற்கு காசர கோடு மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காசரகோடு மாவட்டம்  கர்னாட எல்லையை  ஒட்டிய ஒரு சிறிய கடற்கரை மாவட்டம்.  இதில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களில் அதிகம்பேர் கன்னடம் பேசுபவர்களே உள்ளனர்.

தற்போது கேரளாவில்  பிறப்பிக்கப்படிருக்கும் இந்த சட்டமானது ஏற்கனவே இங்குள்ள 500க்கும் மேற்பட்ட கன்னடம்-மலையாளம் இரண்டு மொழிகளையும் கற்பிக்கும் பள்ளிகளில் கன்னட மொழியை கட்டோடு நிறுத்திவிட வாய்ப்பு ஏற்படும் என்றும், அதன் காரணமாக  கன்னடம் பேசும் மக்களின் முக்கியத்துவத்தை குறைத்து விடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன் காலை 5 மணிக்கே கூடி போராட்டம் நடத்தினர்.

இதில் பேசிய, கர்னாடக ஜனதா  பரிஷத், கேரளா பகுதியின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீநாத், காசரகோடு,  கன்னடம் ஏற்கனவே இங்கு சிறுபான்மை மொழியாக இருப்பதாகவும் இப்போது மலையாளத்தை கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால் தங்கள் மொழியும் கலாச்சாரமும் பின் தள்ளப்படும் எனவும் கூறினார்.

கேரளா அரசு, மலையாளத்தை மட்டுமே கற்க வேண்டும் என கூறாவிடினும்,  மலையாள மொழி அறிந்தவர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் அறிவிப்பதால் தங்களின் மொழியான கன்னடத்தை கற்க மாணவர்கள் முன்வர மாட்டார்கள் எனவும் கூறி இருக்கிறார்.

இன்றைய போராட்டத்தில் 7000 பேர் கலந்துக் கொண்டதாகவும்,  ஆட்சியாளர் மற்றும் பலர் விடுப்பில் இருந்ததால் மாலை 3 வரை போராட்டம் தொடர்ந்ததாகவும் பேராசிரியர் கூறினார்.

கன்னடம் பேசும் மக்கள் அதிகமாக உள்ள இந்த பகுதியில் மலையாளத்தை புகுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது எனவும் கூறினார்

இதே கருத்தை, தபால் துறையை சேர்ந்த பாலகிருஷ்ணனும்,  கர்னாடகா சட்டசபை உறுப்பினர் கணேஷ் கார்னிக் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இது கன்னட மக்களை மட்டுமின்றி தமிழக மாநில எல்லை அருகில் உள்ள தமிழ் மக்களையும் பாதிக்கும் செயல் என கூறினர்

இந்த போராட்டமானது இத்துடன் ஓயுமா என தெரியவில்லை.  வரும் கர்னாடகா/கேரளா சட்டசபை கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எழுப்பபடும் என தெரிகிறது/