பெஷாவர்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பிரபலமான சுன்னேரி மசூதியில் பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் மைந்துள்ள சுன்னேரி மசூதி மிகவும் பிரபலமான மசூதி ஆகும்.   இங்கு கடந்த 23 ஆண்டுகளாகப் பெண்கள் வர அனுமதிப்பதில்லை.   தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டு வந்தது.  தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னேரி மசூதி இமாம் முகமது இஸ்மாயில், “கடந்த 1996 ஆம் ஆண்டு வரை இந்த மசூதிக்குப் பெண்கள் வர அனுமதி இருந்து வந்தது.  அதன் பின்னர் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகப் பெண்கள் வர தடை விதிக்கப்பட்டது  இப்போது அந்த தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வெள்ளிக்கிழமைகளில் 20 பெண்கள் வரை மசூதிக்கு வந்து தொழலாம்” என தெரிவித்துள்ளர்ட்.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பல பெண்கள் அமைப்புக்கள் இந்த தடை நீக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.   அத்துடன் பல தலைவர்களும் இந்த சீர்திருத்த முடிவு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பாகிஸ்தான் மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள பரிசு எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.