புதுடெல்லி: இந்தியாவின் பல மாவட்டங்களில், கொரோனா பரிசோதனை சாம்பிள்களை எடுப்பதில், தனியார் ஆய்வகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
பல்வேறு மாநிலங்களில் அமைந்த பல மாவட்டங்களில், சாம்பிள்களை எடுக்கக்கூடாது என்று அதிகாரிகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவல் எண்ணிக்கையை குறைவாக காட்டுவதற்கே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
‘தைரோகேர்’ என்பது நாட்டின் முதல் 5 தனியார் பரிசோதனை ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்த ஆய்வகத்தின் சார்பில், கோவிட்-19 பாதிப்பு அதிகமுள்ள மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், காஷ்மீர், ஜார்க்கண்ட, உத்திரப்பிரதேசம், டெல்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சாம்பிள்களை சேகரித்து வருகிறது இந்த ஆய்வகம்.
அதேசமயம், தற்போது அந்த ஆய்வகம் சேகரிக்கும் சாம்பிள்களின் எண்ணிக்கை, சுமார் 100 மாவட்டங்களில், ஒவ்வொரு நாளும் சுமார் 2000 வரையில் குறைந்து வருவதாக அந்த ஆய்வகத்தின் நிறுவனர் வேலுமணி கூறியுள்ளார்.
அந்த ஆய்வகம் சாம்பிள்கள் சேகரிக்கும் மாவட்டங்களில், சுமார் 30% மாவட்டங்களில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதாக அந்த ஆய்வகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், எந்தெந்த மாவட்டங்களில், இந்த ஆய்வகப் பணியாளர்களுக்கு பரிசோதனையை குறைத்துக்கொள்ள வேண்டுமென்று கட்டளை வருகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டது அந்த ஆய்வக நிர்வாகம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டுமென்பதே இத்தகைய நடவடிக்கையின் நோக்கமாக இருக்கும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.