சென்னை:

காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், இந்தியாவில் சென்னை உள்பட சில பகுதிகள் கடலுக்குள் மூழ்க்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வரும் 2100ஆம் ஆண்டுக்குள் கடற்கரை நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத், அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற பகுதிகள் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகு வதால் கடல்நீர் மட்டம் உயர்ந்து கடல்நீரால் சூழப்படும் அபாயம் உள்ளது ஐ.நா.வி.ன அறிக்கை மிரட்டி உள்ளது.

ஐ.நா. சபையில்  காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச நிபுணர் குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC) மொனகோவில் நேற்று பகீர் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

இதில் பல்வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக புயல் தாக்கம் போன்ற தீவிர பாதிப்புகள் இந்த நூற்றாண் டில் பலமுறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், வருடத்திற்கு ஒரு முறை நிகழக்கூடும் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

காலநிலை, பருவ நிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதாலும், கடல் வெப்பமடை வதே,  புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என்றும் சர்வதேச நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் 33 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரம் கன மைல் அளவு கொண்ட கடல், இந்தப் பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் ஐநாவும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது.

நாசா விஞ்ஞானியான ஜோஷ் வில்லிஸ் அளித்துள்ள அறிக்கையில், பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் கடலும் வெப்பமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்றும்   எச்சரித்துள்ளார்.

இந்த அறிக்கை குறித்து பேசிய, ஐநா-வின் intergovernmental panel on climate change அமைப்புத் தலைவர் ஹொசாங் லீ, கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைத்தால் மட்டுமே மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க முடியும் என்றும், முன்னர் மதிப்பிட்டதை விட கடல் நீர்மட்டம் உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

கடல் நீரில் அதிகரித்து வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக  கடந்த 100 ஆண்டுகளை விட தற்போது கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார்  100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்தியாவில், இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் கடல் நீர் ஆபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும், 2100ஆம் ஆண்டிற்குள் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயரும் என்றும் intergovernmental panel on climate change வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதுள்ள கடல் மட்டத்தில், சுமார் 50 சென்டி மீட்டர் அளவு நீர் மட்டம் உயர்ந்தால் கூட சென்னை உள்பட பல பகுதிகள் நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.