கொழும்பு:

லங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 3 மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய் பரவி வருகிறது. குறிப்பாக மத்திய மாவட்டங்களான கண்டி, நுவரேலியா, மாத்தளை பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் இந் நோயால் தாக்கப்பட்டு அவதியுறுகின்றனர்.  இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.

கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கும் 6 ஆயிரம் மாணவர்களில் 1200 பேர் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியிருக்கிறது என்றால், இந்நோயின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். இதையடுத்து பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டது.

பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

உலகின் பல நாடுகள், தங்கள் நாட்டு குடிமக்கள் இலங்கை செல்வதை மறைமுகமாக தடுத்து வருகின்றன. அதாவது பயணத்தை ஒத்திவைக்கும்படி வாய்வழி உத்தரவு இடப்படுகிறது.

இன்த நிலையில், கத்தார் நாட்டு அரசு, தனது குடிமக்கள் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என வெளிப்படையாக அறிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள்  தங்களது ட்விட்டர் தளங்களில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் எச்.1.என்.1 என்ற பன்றிக்காய்ச்சால் தொற்று பரவிவருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.  இதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகவே கத்தார் மக்கள் இலங்கை பயணத்தைத் தவிர்க்க வேண்டும்” – இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தற்சமயம் வரை இந்திய தரப்பில் இருந்து இது போன்ற எந்தவொரு அறிக்கையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.