சென்னை:

நதிகள் இணைப்பு இயக்கம் தொடங்கிய ஜக்கி வாசுதேவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் ‘நதிகளை மீட்போம்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் ‘ஈஷா’ யோகா மையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 3-ந்தேதி கோவையில் இந்த விழிப்புணர்வு பேரணியை மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார்.

இதை வலியுறுத்தி ‘ஈஷா’ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நாடு முழுவதும் வாகன பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவரே கார் ஓட்டி செல்கிறார். அவரோடு வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். 16 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த பயணம் அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் முடிவடைகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பேரணி கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்த பயணத்தை மேற்கொண்டு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ஏற்கனவே ரூ. 1 கோடி நிதி அளிப்பேன் என ரஜினி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.