சென்னை,
மெரினாவில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் கலைந்து செல்லும் படி நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்.ஜே.பாலஜியும் இளைஞர்கள் உடனே வீடு திரும்புங்கள் என்ற கூறியுள்ளார்.
இன்று அதிகாலை போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பிரச்சினை வெடித்தது. இதன் காரணமாக போராட்டக்காரர்கள் கடலில் நின்றுகொண்டு போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இதையடுத்து, மெரினாவில் கூடியுள்ள இளைஞர்கள் முன்னிலையில் பேசிய லாரன்ஸ், ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது, வெற்றியை கொண்டாட வேண்டிய நேரம் இது, இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உடனே கலைந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி

நமது போராட்டத்தை மதித்து அரசு உடனே சட்டம் கொண்டு வந்தது. இதுவே நமக்கு வெற்றிதான். வன்முறையில் ஈடுபடுவது கேவலமான செயல். யாரோ நம்மை பொறுக்கி என்று சொன்னபோது நமக்கு கோபம் வந்தது. அதை நிரூபிப்பது போல நடந்துகொள்ள வேண்டாம். நமது போராட்டம் வென்றுவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொள்வோம். எல்லோரும் வீட்டுக்கு திரும்புங்கள்.
இவ்வாறு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்