சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என்று  ஜி.கே வாசன் அறிவித்துள்ளார்.

இன்று  காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஜி.கே.வாசனை அவரது இல்லத்திற்கு சென்று  நேரில் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள வாசன்  இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ஜி.கே.வாசன் கூறியதாவது, “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமாகா ஆதரவு அளிக்கிறது. எம்.ஜி.ஆரின் நம்பிக்கை பெற்ற வேட்பாளர் மதுசூதனன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவால் முதல்வராக அடையாளப்படுத்தப்பட்டவர் ஓ. பன்னீர் செல்வம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்ததுக்கு தமாகா துணை நிற்கும். தமிழக மக்களால் நல்ல மனிதர் மற்றும் அரசியல் ஆர்ப்பாட்டம் இல்லதவராக ஓ,பன்னீர் செல்வம் பார்க்கப்படுகிறார்.

தமாகா – அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. ஆகவே ஓபிஎஸ் உடன் இணைந்து ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன். இந்தக் கூட்டணி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும்” என்றார்.