சென்னை:

ர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

டி.டி.வி. தினகரன்- மருதுகணேஷ்

மருதுகணேஷின் குடும்பமே திமுக பாரம்பரியம் கொண்டது. இவரது தாய் பார்வதி நாராயணசாமி,  திமுக மகளிர் அணி அமைப்பாளர்,  பொதுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். மேலும் கவுன்சிலராகவும் இருந்தார்.

மருதுகணேஷ் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள குருசாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தார். பிறகு (சென்னை) தியாகராயா கல்லூரியில் பிகாம் முடித்தார். தொடர்ந்து சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில், சட்டப்படிப்பு முடித்தார்.

தி.மு.க. நடத்திய போராட்டங்களில் தனது கல்லூரி காலத்திலேயே  ஆர்வத்துடன் கலந்துகொண்டவர் மருது கணேஷ். ஆர்.கே. நகர் பகுதியில் இரு முறை வட்ட செயலாளராக பொறுப்பு வகித்தார். கடந்த முறையும் இதே பதவிக்கு போட்டியிட்டார், ஆனால் சுந்தரராஜன் என்பவருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது.

பத்திரிகை துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமா, தினகரன் நாளிதழின் நிருபராக சேர்ந்தார். தற்போதும் அதே பணியில் இருக்கிறார். அதே நேரம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்துவருகிறார்

“ஆக அ.தி.மு.கவின் டி.டி.வி. தினகரனை எதிர்த்து தி.மு.க சார்பின்ல தினகரன் (நிருபர்) போட்டியிடுகிறார்” என்று அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாக பேசிக்கொள்கிறார்கள்.