லக்னோ:

தேவைப்பட்டால் காவலாளியை (சவுக்கிதார்) நேபாளத்திலிருந்து அழைத்துக் கொள்வோம். எங்களுக்கு தேவை பிரதமர் தான் என ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜீத் சிங் கூறியுள்ளார்.


உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட அஜீத் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, எல்லா பணிகளும் தன்னாலே நடந்தது என கூறிக்கொள்கிறார். இப்படியே போனால், இலங்கைக்கு சென்று ராவணனை தான் கொன்றதாகவும் கூறுவார். தன்னைவிட இத்தகைய செயலை செய்ய யாரும் இல்லை என்றும் கூறுவார்.

தன்னை சவுக்கிதார் (காவலாளி) என அறிவித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. காவலாளியை நாங்கள் நேபாளத்திலிருந்து அழைத்துக் கொள்வோம். எங்களுக்கு பிரதமர்தான் தேவை.

பிரதமர் மோடியின் உடைக்கு மட்டும் ஆண்டுக்கு பல கோடி செலவாகிறது என்கிறார்கள். அவர் அணிந்திருக்கும் தொப்பி போல நீங்கள் எல்லாம் அணிந்திருக்க மாட்டீர்கள். இந்த தொப்பியை அவர் எங்கேதான் வாங்குகிறாரோ?  இவ்வளவையும் செய்துவிட்டு தன்னை பிச்சைக்காரர் என்று கூறிக் கொள்கிறார்.

அவர் பிச்சைக்காரர் என்றால், என்னையும் பிச்சைக்காரராக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

உணவு, உடை, பயணம் அனைத்துமே அவருக்கு இலவசம் என்று இருக்கும்போது, எப்படி அவர் தன்னை பிச்சைக்காரர் என்று சொல்கிறாரோ தெரியவில்லை.

விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைப் பார்த்துவிட்டு, ‘ஹாய் ஹாய் மோடி, பை பை மோடி’ என்று மக்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர் என்றார்.

உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணியில் இணைந்துள்ள அஜீத் சிங், கரும்பு விவசாயிகள் நிறைந்த பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.