சென்னை: தமிழகம் முழுவதும் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான, ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை  சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல், தமிழக அரசு அறிவிக்கப்பட்ட சாலை மேம்பாட்டு டெண்டரை ரத்து செய்து வேண்டும் என திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி மன்ற தலைவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில்,  மத்திய அரசின் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றம் மற்றும் கிராம சபையின் ஒப்புதல் இன்றி தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்பட உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்‍கு வந்தது.  விசாரணையின்போது, ஊராட்சி மன்றங்கள் முடிவெடுத்து, அதனடிப்படையில் டெண்டர் விட வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட  நீதிபதி, ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலமாகவே டெண்டர் வெளியிடுவதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.