பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர் இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா.

தங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லாமல், பெங்களூரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தனர் அவர்கள் இருவரும். கூடிய விரைவில் குணமடைந்து போட்டிக்குத் தயாராகிவிடுவர் இருவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களை பரிசோதித்த நிபுணர் குழுவினர், அவர்கள் தயாராக, இன்னும் 3 முதல் 4 வாரங்கள் தேவைப்படும் என்று அறிவிக்கவே, அதன்பிறகு ஆஸ்திரேலியா சென்று, விதிமுறைப்படி 14 நாட்கள் தனித்திருந்து, பயிற்சியில் ஈடுபட்டு, முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது.

எனவே, முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர். அதேசமயம், அடுத்த 2 போட்டிகளிலாவது பங்கேற்பார்களா? என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.