சிட்னி: நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு, ஒருவழியாக இந்திய அணியுடன் இணைந்தார் ஹிட் மேன் ரோகித் ஷர்மா. அணியுடன் இணைவதற்கு முன்னால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா பங்கேற்கிறார்.

அடிலெய்டில் சந்தித்த மோசமான தோல்விக்குப் பிறகு, யாரும் எதிர்பாராத வகையில் மெல்போர்னில் மீண்டெழுந்து, பெரிய வெற்றியைப் பெற்று தொடரை தற்போது சமனில் வைத்துள்ளது இந்திய அணி. இந்நிலையில், ரோகித்தின் வருகை அணிக்கு இன்னும் வலுவூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் காலக்கட்டம் எப்படி இருந்தது? என்று ரவிசாஸ்திரி கேட்டதற்கு, ‘நான் தற்போது இன்னும் இளமையாக உணர்கிறேன்’ என்று ரோகித் ஷர்மா பதிலளித்த தகவல் தற்போது கவனத்தைப் பெற்று வருகிறது.

அணியில் மீண்டும் இணைந்ததற்கு தனக்கு வாழ்த்து தெரிவித்த புஜாரா, ஜடேஜா, உமேஷ், சிராஜ் உள்ளிட்டவர்களுக்கு பதில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ரோகித் ஷர்மா.