காஷ்மீரில் கடத்தப்பட்ட கணவர் அரவிந்த் சாமியை மீட்க ’ரோஜா’ திரைப்படத்தில் போராடிய மதுபாலாவை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது.    கே பாலசந்தரால் தமிழில் அழகன் என்னும் படத்தில் அறிமுகமான மதுபாலா அடுத்ததாக பாலசந்தரின் வானமே எல்லை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.    அதன் பிறகு அவர் பல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.    பிரபல நடிகை ஹேமாமாலினியின் உறவுக்காரப் பெண்ணான மதுபாலா தனது திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு இந்திப்படமான ’கபி சோச்சா பி நா தா’ என்னும் இந்திப் படத்தின் மூலம் மீண்டும் 2008ல் தலை காட்டிய அவர் அதன் பிறகு 2015ல் கன்னட திரைப்படமான ராணாவில் நடித்தார்.   அதன் பிறகு ஒரு சில கன்னடப் படங்களிலும் தமிழில் வெளிவந்த வாயை மூடிப் பேசவும் படத்திலும் நடித்தார்.

தற்போது மதுபாலா மீண்டும் கன்னடப் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.  ’சீதாராம கல்யாணா’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் நிகில் கவுடா மற்றும் ரசிதா ராம் நடித்து வருகின்றனர்.   இதில் கதாநாயகி ரசிதா ராமின் தாயாக வரும் மதுபாலாவுக்கு முக்கிய கதாபாத்திரம் எனவும் நடிப்பதற்கு மிகவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கதாநாயகன் நிகில் கவுடா முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரன் என்பதும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.