லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்துத்துவா தலைவரான மறைந்த வீர் சவர்க்கரை கவுரவிக்கும் வகையில், அவரது முழுநீள  உருவப்படம் மாநில சட்டமன்ற கேலரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய சுதந்திர வரலாற்றின் தலைவர்களில் ஒருவரான  வீரசவர்க்கார் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இந்துத்வா ஆதரவாளர் என கூறப்படுகிறது. காந்தி படுகொலைக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஆனால், வீர்சவர்க்கர், திலகரை தன் குருவாக கருதி, ஆயுதப் போர் முறையே இந்திய விடுதலைக்கு சரியான வழி என்று கருதி அதன்மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தார்.  ஆங்கிலேயரை எதிர்க்க ‪இந்தியாவிலும் ‬(அபினவ் பாரத்), ‪‎லண்டனிலும்‬ (இந்தியா ஹவுஸ்,free india society ) இயக்கங்களை தலைமை ஏற்று, இந்திய இளைஞர்களை கொரில்லா தாக்குதல், வெடிகுண்டு தயாரித்தல், ஆயுதப்பயிற்சி ,வெடிகுண்டு பயிற்சியில் ஈடுபடுத்தினர். இந்திய மக்களை கொடுமைப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர்களை தங்கள் தொடர் கொலைகள் மூலம் பிரிட்டிஷ் அரசை குலை நடுங்க வைத்தனர்.
இந்த நிலையில், வீர்சவர்க்ர் உருவப்படத்தை, உ.பி. மாநில சட்டமன்றமன்ற  கேலரியில்,  மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை அன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  முதல்வர் ,  வீர் சர்வர்க்கரை ஒரு சிறந்த சுதந்திரப் போராளி மற்றும் தத்துவஞானி என்று குறிப்பிட்டார், அவரது ஆளுமை அனைத்து இந்தியர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு வீர் சாவர்க்கர் அளித்த பங்களிப்பை கூறியதுடன், அவர்  “ஒரு சிறந்த தேசபக்தர்” என்று அழைத்தார்.
உ.பி. மாநில பாஜக அரசின் இந்த செயலுக்கு மாநில காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. இதுதொடர்பாக, காங்கிஸ் எம்எல்சி, ரமேஷ் சிங், சட்ட மேலவை சேர்மனுக்கு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார். அதில், “பிரிட்டிஷின் அட்டூழியங்களை எதிர்த்து, இன்னும் அவர்களுக்கு முன் தலைவணங்காத சிறந்த சுதந்திர போராளிகளுடன் சாவர்க்கர்ஜியின் படத்தை நிறுவுவது அனைத்து வகையான சித்திரவதைகளையும் தாங்கி, சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடிய அனைவருக்கும் ஒரு அவமானம்”  வீர் சவர்க்கர் படத்தை உடனே அகற்றி, அதை பாஜ கட்சி அலுவலகத்தில் வைத்துக்கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ​​இளைஞர்கள் மத்தியில் நாட்டிற்கு பல்வேறு நபர்கள் என்ன பங்களிப்பு செய்துள்ளனர் என்பது குறித்து விவாதம் நடைபெற வேண்டும் என்றும் சுதந்திர போராட்டத்திற்கு பங்களித்த அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.