புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், செப்டம்பர் 3ம் தேதிவரை, ரூ.1.61 லட்சம் கோடி வரையில், கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில் ரூ.3 லட்சம் கோடி அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின்படி, எந்தவித பிணையும் இல்லாமல், நிறுவனங்கள், வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதன்படி, செப்டம்பர் 3ம் தேதி வரை, ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 17 கோடி கடன் வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதில், ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 713 கோடி வரை கடன் வழங்கப்பட்டுவிட்டது. இந்தக் கடன் தொகையானது, 12 பொதுத்துறை வங்கிகள், 24 தனியார்துறை வங்கிகள் மற்றும் 31 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.