நெல்லை : நெல்லையில் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும்; பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலைக்கு சென்ற தனியார் வாகனம், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், மணியாச்சி கிராமம் அருகே இன்று (16.2.2021) காலை கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்ததில், வாகனத்தில் பயணம் செய்த  திரு.கலைசெல்வன் என்பவரின் மனைவி திருமதி பேச்சியம்மாள், திரு.சுடலை என்பவரின் மகள் செல்வி. ஈஸ்வரி, திரு.கணேசன் என்பவரின் மனைவி திருமதி மலையழகு, திரு.மனோகரன் என்பவரின் மனைவி திருமதி பேச்சியம்மாள் மற்றும் திரு.வேலு எனபவரின் மனைவி திருமதி கோமதி ஆகிய ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000/ ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க  உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.