புதுடெல்லி: நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

‘ரெப்போ’ வட்டியில் சுமார் 1 முதல் 3 ஆண்டு காலகட்டத்தில் திரும்பப்பெறும் ஒப்பந்தத்தின்கீழ் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டார், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். அதில், “ரெப்போ வட்டியின் அடிப்படையில் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு நீண்டகால அடிப்படையில் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டம் பிப்ரவரி 15ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் வங்கிகளால் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடியும். நாட்டின் உற்பத்திக்கும் நிலவும் தேவைக்கும் இடையில் அதிக இடைவெளி நீடிக்கிறது.

வளர்ச்சியானது பரவலாக்கப்பட வேண்டும். நடப்பு 2019-20ம் நிதியாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5% என்பதாக இருக்கும் மற்றும் 2020-21 நிதியாண்டில் அது 6% என்ற அளவிற்கு உயரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.