சென்னை: காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் கழிவு தொட்டியை இன்று (14.2.2021) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த பாக்கியராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நான்  உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.