சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை வசூலான தொகை ரூ.134 கோடியாக உயர்ந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவலை தடுக்கவும் நிவாரண பணிகளையும் மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டார்.

இதன்படி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடந்த 6ம் தேதி வரை ரூ.79,74,61,424 கோடி வசூலாகியது.

தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 7 நாட்களில் மட்டும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிடமிருந்து ரூ.54,88,92,940 கோடி வந்துள்ளது.

இந்த வகையில், இதுவரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 வந்துள்ளது. நிதி அளித்தவர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.