நாமக்கல்

மிழகத்தில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீட் பயிற்சி மையங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.150 கோடி பிடிபட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   எனவே நாடெங்கும் பல தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.    சமீபத்தில் நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியிலும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   தற்போது இந்த நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செய்து வரும் மற்றொரு மோசடி வெளி வந்துள்ளது.

நேற்று முன் தினம் தமிழகத்தில் பல நகரங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.   இந்த சோதனை நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் நடந்தது.    இந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது.    சோதனையில் நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பெருமளவு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சோதனையின் போது ரூ.30 கோடி  பணம் சிக்கி உள்ளது.   அதைத் தவிரக் கணக்கில் வராத ரொக்கப்பணம்  ரூ.120 கோடி சிக்கி உள்ளது.  தனியார் பள்ளியான கிரீன்பார்க் எஜுகேஷன் பள்ளியில்  சோதனையில் பள்ளி கலையரங்கில்  பணமும் சொத்துக்களினாவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தனியார் நீட் பயிற்சி மையங்களில்  ஆசிரியர் ஊதியமும் தவறுதலாகக் காட்டப்பட்டு மோசடி நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பரமேஸ்வராவின் வீடு மற்றும் பல இடங்களில் நடந்த வருமான வரிச் சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி சிக்கியது.  இது மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தர பெறப்பட்ட லஞ்சப் பணம் எனக் கூறப்பட்டது.  அதன் தொடர்பாக இந்த மையங்களில் சோதனை நடைபெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.