மதுரை:

பொள்ளாச்சி பாலியல் கொடுமை மற்றும் ஆபாச வீடியோ வழக்கில், அடையாளம் வெளியிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை சிபிசிஐடி காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையில் புகார் அளித்த பெண்ணின் அடையாளம், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், பெற்றோர் விவரங்கள் என அனைத்தும் வெளியிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு அரசாணையிலேயே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி தமிழக அரசு செயல்பட்டதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்ணின் அடையாளத்தையும் முழு விவரத்தையும் நீக்கிவிட்டு புதிய அரசாணையைப் பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அடையாளத்தை வெளியிடப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அரசாணைப் பிறப்பிக்கக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் , கைது செய்யப்பட்டவர்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

மேலும், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.