சென்னை

மிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.2500 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.    கடந்த 2015 ஆம் வருடம் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்பட்டாமல் இருப்பதாகவும்,  சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பாததால் தங்களுக்கு வேலச்சுமை அதிகமாகி உள்ளதாகவும்,  அதனால் உடனடியாக புதிய பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதை அடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏதும் எட்டவில்லை.   மின்வாரிய ஊழியர்கள் அடுத்ததாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிகை விடுத்தனர்.   பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது அமைச்சர் தங்கமணி, “பேச்சுவார்த்தையில் ஏதும் முடிவு ஏற்படாததால்  மின்வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2500 வழங்கப்படும்.  அதே போல ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1250 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.  சென்ற நான்கு மாதங்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த இடைக்கால நிவாரணம் மூலம் 90 ஆயிரம் ஊழியர்கள் பயன் அடைவார்கள்.  இந்த அரசு தொழிலாளர்களுக்கு விரோதமான அரசு இல்லை,  மக்களுக்கும் விரோதமான அரசு இல்லை”  என தெரிவித்துள்ளார்.