சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 3ந்தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோரிடம் காவல்துறை அபராதம் வசூலித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி (26-04-2020)  ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை 3கோடியே 27 லட்சத்து, 33 ஆயிரத்து 714 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.  144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் 6 ஏடிஜிபிக்கள் தமிழகத்தில் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுவோரை காவல்துறையினர் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி இதுவரை  தமிழ்நாடு முழுவதும் 2,76,183 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 3 லட்சத்து 24 ஆயிரத்து 269 பேரை கைது செய்து, அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 339 வழக்குகள் பதிவு செய்யப்ட்டு 3 கோடியே 27 லட்சத்து 33 ஆயிரத்து 714 ரூபாய் காவல்துறையினரால் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.