பாட்னா: தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழந்தால், அந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு  ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,  அங்கு சென்ற தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையிலான குழு,  தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறது.
பாட்னாவில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுனில் அரோரா,  ‘மாநிலத்தில் பாதுகாப்பான, நியாயமான, அமைதியான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது. கொரோனா தொற்றினால் தேர்தல் பணியில் இருப்பவர்கள் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த தேர்தலில், காணொலி தேர்தல் பிரச்சாரம் மட்டுமின்றி, தேர்தல் பொது கூட்டங்களும் நடத்தப்படும். சில இடங்களில், சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும். சமூக மற்றும் ஊடகங்கள் மூலம் மத மற்றும் இன உணர்வுகளைத் தூண்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுக்கள் தொடங்கிவிட்டன. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு தபால் வாக்குமுறை அறிமுகப்படுத்தப்படும். அவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகள் கடைசி நேரத்தில் வாக்களிக்கலாம்’.
இவ்வாறு அவர் கூறினார்.