சென்னை:

திருச்செந்தூர் அருகே காரில் எடுத்து வந்த ரூ.40 லட்சம் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளும், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த 40 லட்சம் ரூபாயினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள காயமொழி மத்திமான்விளையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரில் இருந்த 40 லட்சம் ரூபாயினை கைப்பற்றினர். இதுதொடர்பாக காரில் வந்த உடன்குடி கொட்டங்காடு திமுக பொதுக் குழு உறுப்பினர் வசிகரன், அவரது மகன் அஜித் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.